ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி
மும்பை: மும்பையில் ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுவினை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தனது மகள் ஷீனாபோராவை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார் இந்திராணி முகர்ஜி. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கில் இந்திராணியின் 2வது கணவர் சஞ்சீவ் கன்னா, உதவியாக இருந்த கார் டிரைவர் சாம்ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மேலும் 3வது கணவர் பீட்டர் முகர்ஜியும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் இருக்கும் தனக்கு ஜாமீன் வழங்குமாறு இந்திராணி முகர்ஜி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில், "நான் ரத்தஓட்டம் சம்பந்தபட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளேன். இதன் விளைவாக தனது மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் சப்ளை தடைபட்டு பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் தற்போது அடைக்கப்பட்டுள்ள பைகுல்லா பெண்கள் சிறைச்சாலையில் இருந்து தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சுமார் 45 முதல் 60 நிமிடங்கள் வரை ஆகிறது. இது தனது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்" என இந்திராணி முகர்ஜி கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வழங்கியுள்ளார். மேலும் ஒவ்வொரு காலாண்டிலும் டாக்டர் குழு அவரின் உடல்நிலை குறித்த அறிக்கையை சேகரித்து கோர்ட்டுக்கு நேரடியாக அனுப்பிவைக்கவேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.