நீட் தேர்வு முடிவுக்கு தடை கிடையாது...கைவிரித்த சுப்ரீம் கோர்ட்! - மாணவர்கள் அதிர்ச்சி
நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என்றும், நடப்பு ஆண்டில் நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி : நீட் தேர்வுக்கு நடப்பு ஆண்டில் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது, நீட் தேர்வு முடிவுக்கு எதிராக மாணவ அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2017 - 18ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்று அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்வுகளும் நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வில் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழி வினாக்களுக்கும் தமிழக உள்ளிட்ட மாநில மொழி வினாக்களுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் கூறி பாதிக்கப்ப்டட மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. இதனை எதிர்த்து சிபிஎஸ், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் கடந்த முறை நடந்த விசாரணையின் போது நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவு அளிக்கப்பட்டதையடுத்து முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நடந்த அடுத்த கட்ட விசாரணையின் போது நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என்றும் நடப்பாண்டில் நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது. ஏறத்தாழ 11 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதி சுமார் 6.11 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று கலந்தாய்வுப் பணியும் தொடங்கிவிட்டது, இந்த நிலையில் நீட் தேர்வு முடிவிற்கு தடை விதிக்க முடியாது.
நீட் தேர்வில் மாறுபட்ட கேள்விதாளை வழங்கியது ஏன், இது போன்ற தவறுகள் வருங்காலத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டியவை குறித்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ய சிபிஎஸ்இக்கு உச்சநீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக மாணவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.