திருப்பதி கோவில் மீது விமானம் பறப்பதற்கு தடை விதிக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
டெல்லி: திருப்பதி கோவில் மீது விமானம் பறப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும், இந்த கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், நேர்த்திக்கடனை நிறைவேற்ற, தங்கம், வெள்ளியால் ஆன ஆபரணங்கள், பணம் மற்றும் இதர பொருட்களை காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். இது தவிர, கோவிலுக்கு நன்கொடையாகவும் பணம், தங்கம், மற்றும் வெள்ளி ஆபரணங்கள் வருகின்றன.
இந்த நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான கோவில் மேல் விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான கோரிக்கையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சகம், திருப்பதியில் சர்வதேச விமான நிலையம் உள்ளதால், திருப்பதி கோவிலின் மேற்பரப்பில் விமானம் பறக்க தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு தேவஸ்தான நிர்வாகத்தை கவலையடைய செய்துள்ளது. கோவிலுக்கு மேல் விமானங்கள் தாழ்வாக பரப்பதால், பாரம்பரிய கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.