ரயில் பராமரிப்பு குறித்து சிஏஜி அறிக்கை எதிரொலி.... ஏசி ரயில்களில் போர்வை வழங்குவது நிறுத்தம்-?
ரயில்கள் பராமரிப்பு குறித்து சிஏஜி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து சில ரயில்களின் ஏசி கோச்சுகளில் வழங்கப்படும் போர்வையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..
டெல்லி: மத்திய கணக்கு மற்றும் தணிக்கை குழுவின் அறிக்கையின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ரயில்களில் ஏசி கோச்சுகளில் வழங்கப்படும் போர்வையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கணக்கு மற்றும் தணிக்கை குழு எனப்படும் சிஏஜி சமீபத்தில் ரயில்வே தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ரயில்கள் சுத்தமாக இல்லை என்றும், சுகாதாரம் சரியாக பேணப்படுவதில்லை என்றும் சிஏஜி குறிப்பிட்டிருந்தது.
மேலும் இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகத்துக்கு கண்டனமும் தெரிவித்திருந்தது. இதையடுத்து குறிப்பிட்ட சில ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வைகள் வழங்குவதை நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரயில்வே அதிகாரி தகவல்
இது குறித்து ரயில்வே துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், குறிப்பிட்ட சில ரயில்களில் சோதனை முயற்சியாக பயணிகள் குளிரில் நடுங்காமல் இருக்க வெப்பநிலை 19 டிகிரி செல்சியசிலிருந்து, 24 டிகிரி செல்சியசாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுத்தப்படுத்த ஆகும் செலவு
பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வை, படுக்கை விரிப்புகளை சுத்தப்படுத்த ரூ.55 செலவாகிறது. ஆனால் பயணிகளிடம் இதற்காக ரூ.22 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது ரயில்வே துறைக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது.
சமாளிக்க யோசனை
இந்த கூடுதல் செலவை குறைக்க ஏசி பெட்டிகளில் வெப்பநிலையின் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். ரயில்வே விதிகளின்படி, 2 மாதங்களுக்கு ஒரு முறை பெட்ஷீட்கள், போர்வைகள் ஆகியவற்றை சுத்தப்படுத்த வேண்டும். ஆனால் இது முறையாக பின்பற்றப்படாததால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
ஒரு முறை பயன்படுத்தக் கூடிய...
பொதுமக்களின் புகார்களை தவிர்க்க தவிர்க்க கடந்த ஆண்டு ஐஆர்சிடிசி ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் படி டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணிகள், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பெட்ஷீட் மற்றும் போர்வையை ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் பதிவு செய்து, ரயில் நிலைய கவுன்ட்டர்களில் பெற்று கொள்ளலாம். இதன்படி 2 பெட்ஷீட்டுகள் ஒரு தலையணைக்கு ரூ.140-ம், போர்வைக்கு மட்டும் ரூ.110-ம் செலுத்த வேண்டும். எனினும் இவை இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.