கறி விற்பனைக்கு 4 நாள் தடை... அதெப்படி நிறுத்தலாம்? - மும்பையில் கொதித்தெழுந்த அசைவப் பிரியர்கள்
மும்பை: மும்பையில் ஜைன மதத்தினரின் நோன்புக் காலத்தை முன்னிட்டு இறைச்சி விற்க விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையைச் சேர்ந்த அசைவப் பிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, தானே நகராட்சியின் முந்தைய உத்தரவை கடைபிடித்த மும்பை நகராட்சி ஜைன மதத்தினரின் நோன்புக் காலத்தை முன்னிட்டு வரும் 10, 13, 17 மற்றும் 18 என இந்த நாட்களிலும் மும்பைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சிக்காக ஆடுகள், கோழிகள் போன்றவை வெட்டப்படவோ, விற்கப்படவோ கூடாது என்று உத்தரவிட்டது. எனினும், மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் விற்க தடை ஏதுமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
பெருகிவரும் ஜைன மக்களின் விருப்பத்தையும், கோரிக்கையையும் நிறைவேற்றவே இந்த தடை விதிக்கப்படுவதாகவும் இதை மீறி இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பொருளாதார இழப்பு:
இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள குரோஷி இன மக்கள், இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் நாங்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். இந்த தடையை நீக்க வேண்டும் என மும்பை மேயரை சந்தித்து முறையிடுவோம் என கூறிவருகின்றனர்.
வழக்குத் தொடரவும் தயார்:
எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் இந்த தடையை நீக்கக்கோரி மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரவும், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவசேனாவின் எதிர்ப்பு:
பா.ஜ.க.வின் நிர்வாகத்தில் உள்ள மும்பை நகராட்சி விதித்துள்ள இந்த தடைக்கு அதன் தோழமை கட்சியாகவும், மும்பை நகராட்சி மன்றத்தில் அதிக உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சியாகவும் உள்ள சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மதம்சார்ந்த தீவிரவாதம் எனவும் அக்கட்சி வர்ணித்துள்ளது.
கட்டுப்படுத்துவது குற்றம்:
சீக்கியர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள் அனைவருமே இங்கு சிறுபான்மை இனத்தவர்கள்தான். நாம் அவர்கள் அனைவருக்கும் மதிப்பளிக்க வேண்டும். இந்நிலையில், அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என கட்டுப்படுத்தும் இந்த தடையை ஏற்றுக்கொள்ள முடியாது.
சஞ்சய் ரவுத் அறிவுறுத்தல்:
குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை மட்டும் திருப்திப்படுத்த நினைக்காமல் அரசியலமைப்பு சட்டத்துக்கு மதிப்பளித்து மும்பை நகராட்சியின் நிர்வாகம் நடந்துகொள்ள வேண்டும் என சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ரவுத் அறிவுறுத்தியுள்ளார்.