குண்டுவெடிக்கவில்லை... டுவிட்டரில் உமர் அப்துல்லா மறுப்பு
ஸ்ரீநகர்: பரூக் அப்துல்லா பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தின் அருகே வெடிகுண்டுகள் எதுவும் வெடிக்கவில்லை என காஷ்மீர் முதல்வரும், பரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா மறுத்துள்ளார்.
ஸ்ரீநகருக்கு அருகே உள்ள ஹன்யர் பகுதியில் காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் பிரசாரம் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கலந்து கொண்டார். கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பட்கம் மாவட்டம் மகம் பகுதியில் ஸ்ரீநகர்-குல்மர்க் சாலையில் 11.45 மணிக்கு, மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
இக்குண்டு வெடிப்புகளில் உயிர்ப்பலி ஏதும் ஏற்படவில்லை என்றபோதும், நெரிசலில் சிக்கி சுமார் 15 பேர் காயமடைந்ததாக அங்கிருந்த போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், இத்தகவலை காஷ்மீர் அரசு மறுத்துள்ளது.
இது தொடர்பாக காஷ்மீர் மாநில முதல்வரும், பரூக் அப்துல்லாவின் மகனுமாக உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பக்கதில் தெரிவித்துள்ளதாவது, ‘கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே குண்டுவெடிப்புக்கள் ஏதும் நிகழ்த்தப்படவில்லை; தொலை தூரத்தில் பயங்கர சத்தம் மட்டும் கேட்டது; எதனால் சத்தம் வந்தது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்னறர்; தேர்தல் பிரசார கூட்டம் எவ்வித இடையூறும் இன்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது' என கூறியுள்ளார்.