3 நாளுக்கு குடிக்கக் கூடாது, கறிச் சோறும் கிடையாது... அதிகாலை 5 மணிக்கு "டான்"னு யோகா செய்யனும்!
கட்ச், குஜராத்: குஜராத் மாநிலம் கட்ச்சில் இன்று தொடங்கும் 50வது அகில இந்திய டிஜிபி மற்றும் ஐஜிக்கள் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு பல சிக்கலான கண்டிஷன்களை போட்டுள்ளதாம் அரசு.
மாநாடு நடக்கும் 3 நாட்களும் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
இந்த உத்தரவுகளை மறக்காமல் பின்பற்றுமாறும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்த உத்தரவில் முக்கியமானது, 3 நாட்களும் மது அருந்தக் கூடாது என்பதுதான்.
50வது டிஜிபிக்கள் மாநாடு
டெல்லியில் 50வது டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் மாநாடு இன்று தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் டோவல், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
டிஜிபிக்கள் - ஐஜிக்கள்
இந்த மாநாட்டில் அனைத்து மாநில டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்பு
தேசியப் பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல், நக்சலைட் பிரச்சினை என பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
அதுக்கு முன்னாடி
ஆனால் இந்த மாநாட்டின் முக்கிய சுவாரஸியமாக பார்க்கப்படுவது மாநாட்டுக்கு வந்துள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அரசுத் தரப்பில் போடப்பட்டுள்ள சில கட்டளைகள்தான்.
ஆரும் குடிக்கக் கூடாது!
மாநாடு நடைபெறும் 3 நாட்களும் எந்த அதிகாரியும் மது அருந்தக் கூடாது என்று கண்டிப்புடன் உத்தரவிடப்பட்டுள்ளதாம்
காலை 5 மணிக்கு யோகா
தினசரி காலை 5 மணிக்கு யோகா வகுப்பு நடத்தப்படும். அதில் அனைவரும் தவறாமல் ஆஜராகி யோகா செய்ய வேண்டுமாம்.
இப்படித்தான் டிரஸ் போட வேண்டும்
அதிகாரிகளுக்கு டிரஸ் கோடும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து யாரும் வழுவக் கூடாது என்று கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளதாம். அனைவரும் கட்டாயம் நீல நிற பிளேஸர்தான் அணிய வேண்டு்ம் என உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
சேலை மட்டுமே கட்ட வேண்டும்
பெண் காவல்துறை அதிகாரிகள் கட்டாயம் சேலை மட்டுமே கட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
கறிச்சோறு கிடையவே கிடையாது
அதை விட முக்கியமாக அசைவ உணவு இந்த 3 நாட்களும் பரிமாறப் படாதாம். மாறாக சுத்த சைவம்தானாம்.
மீடியாவுக்கு அனுமதி இல்லை
இந்த மாநாட்டின்போது மீடியாவுக்கும் அனுமதி கிடையாதாம். உள்துறை அமைச்சக அதிகாரிகளே தினசரி மீடியாவுக்கு செய்திக்குறிப்பை தினசரி விநியோகிப்பார்களாம் அல்லது மாநாடு முடிந்த பிறகு பிரஸ் மீட் வைக்கப்படுமாம்.