உத்தராகண்ட் மாநில அரசு அதிகாரிகள், கார், செல்போன் வாங்க நீதிமன்றம் அதிரடி தடை! ஏன் தெரியுமா?
பள்ளிக்கு பெஞ்ச் உள்ளிட்ட அடிப்படை பொருள்களை வாங்கும் வரை அரசு அதிகாரிகளுக்கு கார் , செல்போன் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்களை வாங்க உத்தரகண்ட் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நைனிடால்: அரசு பள்ளிகளுக்கு பெஞ்ச் உள்ளிட்ட அடிப்படை பொருள்களை வாங்கும் வரை அரசு அதிகாரிகளுக்கு விலையுயர்ந்த பொருள்களை வாங்கக் கூடாது என்று உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என தீபக் ரானா என்பவர் கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அரசு பள்ளிகளுக்கு தேவையான ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு செட் சீருடை, சத்துணவு, போதுமான விளக்கு, பெஞ்ச், கரும்பலகைகள், மேஜை, குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், ஃபேன் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.
மீண்டும் விசாரணை
ஆனால் அரசோ அதை நிறைவேற்றவில்லை. இதைத் தொடர்ந்து பலமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு செய்யாததால் இந்த வழக்கானது நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அதிகாரிகளுக்கு மட்டும்
அப்போது பேசிய நீதிபதிகள், படிக்கும் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை இந்த அரசாங்கம் செய்து கொடுக்க முன்வரவில்லை. ஆனால் அரசு அதிகாரிகளுக்கு கார், ஏசி, செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் வாங்கி தர மட்டும் நிதி ஒதுக்குகிறது.
இனி தடை
அரசு பள்ளிகளுக்கான உபகரணங்களை வாங்கும் வரை அரசு அதிகாரிகளுக்கு கார், ஏசி, போன் ஆகியவற்றை அரசு நிதியிலிருந்து வாங்கக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாஜக ஆளும் அந்த மாநிலத்தில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரியான சவுக்கடி
எதிர்கால சந்ததியினரால் மட்டுமே வருங்காலத்தை வளமாக்க முடியும் என்று கருத்து நிலவி வருகிறது. தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகளை ஊக்குவிக்க வேண்டியது அரசின் கடமை. அதனால்தான் சத்துணவு, இலவச சீருடை உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அரசு பள்ளிகளுக்கு செய்யாமல் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் சொகுசாக வாழ வகுக்கும் அரசுக்கு நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்ததாக இந்த உத்தரவு கருதப்படுகிறது.