சில்லறை தட்டுப்பாடு... ரயில் டிக்கெட் ரத்து செய்தால் ரீஃபண்ட் பணமாக கிடையாது- ரயில்வே அறிவிப்பு
டெல்லி: ரு.500, 1000 பணத்தை திரும்ப பெற்று வரும் நடவடிக்கை காரணமாக மாற்று நோட்டுகள் இல்லாமையால் டிக்கெட் கேன்சல் செய்பவர்களுக்கு பணம் திருப்பி அளிப்பதில் இந்திய ரயில்வே துறைக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரொக்க ரீஃபண்ட் இல்லை என்று ரயில்வே துரை அறிவித்துள்ளது. மாறாக டிக்கெட் டெபாசிட் ரசீதுகளை (TDR) வழங்குகிறது.
ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் டிக்கெட்டை கேன்சல் செய்தால் மட்டுமே முழு பணம் கிடைக்கும். உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரயில் புறப்பட்ட 2 மணி நேரத்துக்கு பின்னர் கேன்சல் செய்ய முடியாது. புதிய விதிமுறையின்படி காத்திருப்போர் பட்டியல் மற்றும் ஆர்ஏசி டிக்கெட்டுகளை ரயில் புறப்பட்ட 3 மணி நேரத்துக்கு பின்னர் கேன்சல் செய்தால் 30 ரூபாய் பிடித்தம் செய்து கொண்டு மீதி பணம் திரும்ப கொடுக்கப்படும்.
இந்த நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த பிரதமர் மோடி, ரயில் நிலையங்களில் நவம்பர் 11 வரை மாற்றிக்கொள்ளலாம் என்றார். எனினும் தற்போது டிக்கெட் கேன்சல் செய்தால் பணமாக திரும்ப தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்தாலும் ரயில் நிலையங்களில் கொடுக்கலாம் என்று அரசு அறிவித்ததையடுத்து ரிசர்வேஷன் உள்ளிட்ட ரயில்வே கவுண்டர்களில் கூட்டம் நெரிசல் கண்டது. இதனையடுத்து மற்ற நோட்டுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
டிக்கெட் கேன்சல் செய்ததன் மூலம் திரும்பத் தர வேண்டிய தொகை ரூ.10,000 என்றால் வாடிக்கையாளர்கள் பணத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடிவெடுத்துள்ளது ரயில்வே நிர்வாகம், இதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும்.
எனவே டிக்கெட் கேன்சல் செய்பவர்களுக்கு டி.டி.ஆர். என்ற ரசீதுகளை வழங்கி வருகிறோம், ரீஃபண்ட் தொகை ரூ.10,000 மற்றும் அதற்கும் கூடுதலாக இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் சேர்க்கிறோம் என்று ரயில்வே அதிகாரி கூறியுள்ளார்.