பத்மநாபசுவாமி கோவிலில் பொக்கிஷம் உள்ள பி ரகசிய நிலவறையை திறக்க முடியவில்லை
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள ரகசிய நிலவறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இங்குள்ள நிலவறைகளில் பெரிய அறையான ‘பி' நிலவறை மட்டும் இன்னும் திறந்து ஆய்வு செய்யப்படவில்லை. இந்த நிலவறை கதவுகளை திறக்க முடியாததால் இந்த பணி நடைபெற முடியவில்லை.
இந்த ‘பி' நிலவறை 100 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை என்றும், இந்த நிலவறையை திறந்தால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் சார்பில் கூறப்பட்டது.
இதற்கிடையில் பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள் மற்றும் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் தனது ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அவர் தனது அறிக்கையில் ‘பி' ரகசிய நிலவறை பலமுறை திறக்கப்பட்டு அதில் இருந்த பொக்கிஷங்கள் மன்னர் குடும்பத்தினரால் எடுக்கப்பட்டுள்ளன என்றும், கோவில் கணக்குகளில் ஏராளமான முறைகேடுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ‘பி' ரகசிய நிலவறையை தாங்கள் திறக்கவில்லை என்று மன்னர் குடும்பத்தினர் அறிவித்தனர். இதனால் இந்த விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷஙகளை மதிப்பிட நியமிக்கப்பட்ட முதல் குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன், பத்மநாபசுவாமி கோவில் ‘பி' ரகசிய அறையில் ஏராளமான பொக்கிஷங்கள் இருப்பது உண்மைதான். அந்த அறைக்கு செல்ல இரும்பு, மரம் மற்றும் கருங்கல்லாலான 3 கதவுகள் உள்ளன.
1885-ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் பாலராமவர்மா காலத்தில் இந்த ரகசிய அறை திறக்கப்பட்டு அதில் இருந்த பொக்கிஷங்கள் எடுக்கப் பட்டு நாட்டு மக்களை பஞ்சத்தில் இருந்து காப்பாற்ற உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு இந்த அறை திறக்கப்படவில்லை. நாங்கள் மதிப்பீடு செய்வதற்காக இந்த அறையை திறக்க முயற்சி செய்தோம்.
முதல் 2 கதவுகளையும் எங்களால் திறக்க முடிந்தது. 3வதாக உள்ள பாம்பு உருவங்கள் செதுக்கப்பட்ட கருங்கல் கதவை எங்களால் திறக்க முடியவில்லை. எனவே அந்த முயற்சியை கைவிட்டுவிட்டோம்.
‘பி' ரகசிய நிலவறையை திறந்தால் ஆபத்து ஏற்படும் என்று கூறுகின்றனர். ஆனால் அந்த அறையை திறந்த பாலராமவர்மா மன்னர் அதன் பிறகு 5 ஆண்டுகள் நலமாகத்தான் இருந்தார் என்று அவர் கூறினார்.