ஒன்றும் சொல்வதற்கு இல்லை.. வினோத் ராய் குறித்து மன்மோகன் சிங் "கருத்து"!
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் தன்னைப் பற்றி முன்னாள் சிஐஜி வினோத் ராய் கூறியிருப்பது குறித்து கருத்து ஏதும் சொல்வதற்கு இல்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இவர் இப்படித்தான் சொல்வார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்புக்கேற்ப மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுக்கு மன்மோகன் சிங் பொறுப்பாளி என்று முன்னாள் கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து மன்மோகன் சிங் என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதேசமயம், அவர் கருத்து தெரிவிக்க மாட்டார் என்ற பலமான எதிர்பார்ப்பும் கூடவே இருந்தது.
இந்த நிலையில், வினோத் ராயின் குற்றச்சாட்டு குறித்து மன்மோகன் சிங்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், நான் என்னுடைய கடமையைத்தான் செய்தேன். மற்றவர்கள் என்ன எழுதியுள்ளார்களோ அதுகுறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார் சிங்.
முன்னதாக வினோத் ராய் அளித்த ஒரு பேட்டியில், மன்மோகன் சிங் குறித்துக் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரங்களில் தனக்குள்ள பொறுப்பில் இருந்து தப்பிக்க மன்மோகன் சிங்குக்கு எந்த வழியும் இல்லை. 2ஜி ஒதுக்கீடு தொடர்பாக ஆ.ராசா எழுதிய அனைத்து கடிதங்களுக்கும் மன்மோகன் சிங் பதில் எழுதி இருக்கிறார்.
நான் எழுதிய கடிதத்துக்கு மன்மோகன் சிங்கிடம் இருந்து ஒரு பதில் கூட கிடையாது. ஒரு சமயம் நான் அவரை சந்தித்த போது, என்னிடம் இருந்து நீங்கள் பதிலை எதிர்பார்க்க மாட்டீர்கள் என கருதுகிறேன் என்று கூறினார். அந்த சமயத்தில் அவர் ஆ.ராசாவுக்கு ஒரு நாளைக்கு இருமுறை பதில் அளித்தார். அப்படி இருக்கும் போது, எடுக்கப்பட்ட முடிவுகளில் அவர் எப்படி பொறுப்பாளி ஆகாமல் இருக்க முடியும்?
நிதி ரீதியாக மட்டுமல்லாமல், அறிவுப்பூர்வமாகவும், செய்யும் பணியிலும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். அரசியல் சாசனப்படி உறுதிமொழி ஏற்றதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட முடியாது. அதுதான் அவருக்கு மிகுந்த கவலையாகிவிட்டது. அரசுக்கு பல லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கணக்கு தணிக்கை துறை மதிப்பீடு செய்த முறை தவறானது என்று நவம்பர் 16ம் தேதி மன்மோகன் சிங் என்னிடம் கூறினார். அதற்கு நான் அவரிடம், சார் எங்கள் மதிப்பீடு சரியான முறையில் செய்யப்பட்டதுதான், அது நீங்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த முறைதான் என்று பதில் அளித்தேன் என்று ராய் கூறியிருந்தார்.