'யோகா தினத்துக்காக லீவெல்லாம் கிடையாது.. இஷ்டம்னா கலந்துக்கங்க!' - மத்திய அரசு
டெல்லி: இன்று யோகா தினத்துக்கு பொது விடுமுறை கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இரண்டாவது சர்வதேச யோகா தினம் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு அரசு, தனியார், மதச் சார்பு அமைப்புகளும் இந்தக் கொண்டாட்டங்களை நடத்துகின்றன.
இதனால் யோகா தினத்துக்கு அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின.
இதனைத் தொடர்ந்து மத்திய பணியாளர் - பயிற்சித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சர்வதேச யோகா தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை கிடையாது. அனைத்து அரசு அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும். யோகா தின நிகழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம். எனினும், யோகா தின நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் பங்கேற்கும் வகையில், பல்வேறு நகரங்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட யோகாசன நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சண்டீகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
வாராணசி, இம்பால், ஜம்மு, சிம்லா, வதோதரா, லக்னெள, பெங்களூரு, விஜயவாடா, புவனேசுவரம், ஹோஷியார்பூர் ஆகிய இடங்களில் மிகப்பெரிய அளவில் யோகாசன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, 391 பல்கலைக்கழகங்களிலும், 16,000 கல்லூரிகளிலும், 12,000 பள்ளிகளிலும் யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளது.