இந்திய எல்லையில் ஊடுருவலை நிறுத்திக்கொள்ளுங்கள்: பாகிஸ்தான், சீனாவுக்கு ராஜ்நாத்சிங் எச்சரிக்கை
ஸ்ரீநகர்: தீவிரவாதம், ஊடுருவல், எல்லைத் தாண்டுதல் ஆகிய நடவடிக்கையை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கைவிடுத்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான், சீனா எல்லை பகுதிகளில் இன்று முதல் 3 நாள் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
சம்பா பகுதியில் இந்திய-திபெத் எல்லை போலீஸ் படை முகாமில் உணவு விடுதியை அவர் இன்று திறந்து வைத்தார். பின்னர் அதன் அருகில் உள்ள இந்திய ராணுவ நிலைகளுக்கு சென்று பார்வையிட்டார். இங்கு அடிக்கடி எல்லை தாண்டிய துப்பாக்கி சண்டைகள் நடந்து வருவது குறித்து ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது ராஜ்நாத்சிங் பேசியதாவது: இந்தியாவுடன் நல்ல நட்புறவு நீடிக்க அனைத்து அண்டைய நாடுகளும் தீவிரவாதம், ஊடுருவல் மற்றும் எல்லைத் தாண்டுதலை நிறுத்திக் கொள்ளவேண்டும். இந்தியா அனைத்து அண்டைய நாடுகளுடன் நட்புறவையே விரும்புகிறது.
பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நல்ல நட்புறவையே நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவுடனான நட்புறவானது வளர்ச்சி அடையும் வரையில் ஆசிய கண்டத்தில் வளர்ச்சியும், அமைதியும் நிலவாது. இந்தியா அமைதியை விரும்பும் நாடு. நாங்கள் எங்களுடைய எல்லையை பாதுகாக்கவே விரும்புகிறோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.