இந்த மூவரில் யார் சட்டீஸ்கர் முதல்வர்? காங். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இழுபறி.. ராகுல் கையில் முடிவு
ராய்ப்பூர்: சட்டீஸ்கரிலும் யாரை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. சட்டீஸ்கரில் 3 தலைவர்கள் முதல்வருக்கான ரேஸில் உள்ளனர். லோக்சபா எம்.பி.யும், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் துர்க் க்ராமின் தொகுதியில் போட்டியிட்டு வென்றவருமான தம்ராத்வாஜ் சாஹு, சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாகல் மற்றும் மூத்த தலைவர் டி.எஸ்.சிங் தியோ ஆகியோர் இப்போட்டியில் உள்ளனர்.
15 வருடகால ராமன்சிங் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதிய காங்கிரஸ் 90 உறுப்பினர்களை கொண்ட சட்டீஸ்கரில் 68 தொகுதிகளை வென்று அசத்தியுள்ளது.
இதனிடையே, இன்று இரவு 8 மணிக்கு தலைநகர் ராய்ப்பூரில் காங். எம்எல்ஏக்கள் கூட்டம் கூடியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் மல்லிகார்ஜுன கார்கே, சட்டீஸ்கர் பொறுப்பாளர் பி.எல்.புனியா மற்றும் பிற மூத்த தலைவர்கள் அதில் பங்கேற்றனர். ஆனால், யாரை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பதில் இழுபறி நீடித்தது.
எனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முடிவுக்கே விட்டுவிடுவதாக இதில் முடிவெடுக்கப்பட்டது. ராஜஸ்தானிலும் இதே சூழ்நிலைதான். ராகுல் காந்தி கையில்தான் முடிவு ஒப்படைக்கப்பட்டுள்ளது.