”நாசா”வின் நிலநடுக்க எச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம் - மத்திய அரசு வேண்டுகோள்
டெல்லி: இந்தியாவிற்கான நிலநடுக்க எச்சரிக்கையினை நாசா வெளியிடவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அது போன்ற செய்திகளையும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
நாசா குறித்த குறுஞ்செய்தி ஒன்று செல்போன் பயனாளிகளிடம் உலா வருகின்றது. அதில், "வட இந்தியாவில் அடுத்த 8 மணிக்கு பெரும் நிலநடுக்கம் ஏற்படும். நியூஸ் ஃபிரம் நாசா" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அது போன்று பரவுவது தவறான செய்தி. நிலநடுக்கம் குறித்து எந்த அறிவிப்பினையும் நாசா வெளியிடவில்லை. மக்களிடம் பீதியைக் கிளப்பவே அது போன்ற் செய்திகள் பரப்பப்படுகின்றன" என்று இந்திய புவியியல் ஆராய்ச்சி மையத்தின் நிலநடுக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து எந்த செய்தியும் இந்திய அரசிற்கு வந்தடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எந்த நாடும் முன்கூட்டியே நிலநடுக்கத்தைக் கண்டறிந்து பாதுகாக்க முடியாது. அந்தளவிற்கான கண்டுபிடிப்புகள் இன்னும் மேம்படவில்லை. சீனாவில் இதுகுறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும் துல்லியமான கண்டுபிடிப்புகள் இதுவரை நடைபெறவில்லை" என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.