பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கள்ள நோட்டு பிரச்சனையும் தீரவில்லை.. ஆர்பிஐ தகவல்
டெல்லி: பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கள்ள நோட்டு பிரச்சனை தீரவில்லை என ஆர்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், 99 சதவிகிதத்துக்கும் மேலான தடை செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு கருப்புப்பணம் மீட்கப்படாத நிலையில் அதற்காக அரசு செலவழித்த தொகை அதிகம் என்றும் ஆர்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு சார்பில் அப்போது கூறப்பட்டது. மேலும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் வகையில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கள்ளநோட்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என ஆர்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் 2018ஆம் நிதியாண்டில் கள்ள நோட்டுகளை ஒட்டுமொத்த கண்டுபிடிப்பு முந்தைய நிதியாண்டை விட 31.4% குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் வருடாந்தர அறிக்கையில் புதிய ரூபாய் 500 மற்றும் ரூபாய் 2,000 நோட்டுகளிலும் கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.