நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது - மத்திய அமைச்சர் நட்டா கைவிரிப்பு
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்போது விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா கூறியுள்ளார்.
டெல்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்போது விலக்கு அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தெரிவித்துள்ளார். விலக்கு அளிப்பது தொடர்பாக பின்னர் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு என்ற 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. மே 7ஆம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடக்கிறது.
தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாமல் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவபடிப்பில் சேர முடிகிறது. ஆனால் நீட் தேர்வு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுவதால் அது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என்று அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தின.
நீட் தேர்வு வேண்டாம்
நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு அடைவார்கள் என்றும் அதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்தின் அரசு மருத்துவம் மற்றும் பல மருத்துவ கல்லூரிகளுக்கு விலக்கு பெற சட்ட மசோதா சட்டசபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்த சட்ட மசோதா குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
மத்திய அமைச்சருடன் சந்திப்பு
நீட் தேர்வு நடத்துவதில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆளும் அதிமுக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுடன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து பேசினார். அப்போது எம்.பி தம்பித்துரையும் உடனிருந்தார்.
கைவிரித்த ஜே.பி நட்டா
நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு வைத்த கோரிக்கை ஏற்க மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா மறுத்து விட்டார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்போது விலக்கு அளிக்க முடியாது என ஜே.பி.நட்டா, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி பின்னர் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு நடைபெறும் மையங்கள்
தமிழகத்தில் இந்த ஆண்டு நெல்லை, வேலூர், நாமக்கல் ஆகிய மேலும் 3 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் 80 நகரங்கள் தவிர மேலும் 23 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று அவர் அறிவித்தார். அந்த 23 நகரங்களில் தமிழகத்தில் நெல்லை, வேலூர், நாமக்கல் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 8 நகரங்களில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறகிறது. இதன் மூலம் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கேட்ட தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது தெரிய வந்துள்ளது.