சுயசார்பு பாரதம் உருவாவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: பிரதமர் மோடி
கொல்கத்தா: 130 கோடி இந்தியர்கள் இணைந்து உருவாக்கும் சுயசார்பு பாரதத்தை உலகின் எந்த ஒரு சக்தியாலும் தடுத்துவிட முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு நாணயம், அஞ்சல் தலையை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது;
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினம் இனி ஆண்டுதோறும் பராக்கிரம தினமாக கொண்டாப்படும். உலகம் பெண்களின் உரிமைகள் குறித்து பேசிக் கொண்டிருந்த காலத்தில் பெண்களைக் கொண்ட ஜான்சி ராணி ரெஜிமென்ட்டையே உருவாக்கியவர் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்.
இந்திய விடுதலைப் போரில் புதிய பார்வையை கொடுத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 2-வது உலக யுத்தத்தின் போது ஒவ்வொரு நாடுகளின் உதவியையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கேட்டது தேசத்தின் விடுதலைக்காக. இன்று ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் விஸ்வரூபத்தை பார்த்து கொண்டிருக்கிறது.
இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்படுகிற சவால்களுக்கு நாம் தக்க பதிலடியை கொடுத்து கொண்டிருக்கிறோம். 130 கோடி இந்தியர்கள் இணைந்து உருவாக்கும் சுயசார்பு பாரதத்தை உலகின் எந்த ஒரு சக்தியாலும் தடுத்துவிட முடியாது.
நேதாஜியின் வாழ்க்கை, செயல்பாடுகள், முடிவுகள் அனைத்தும் நமக்கு முன்னுதாரணமானவை. கொரோனா காலத்தில் நாம் பிறநாடுகளுக்கு உதவுவதை பார்த்து நேதாஜி இருந்திருந்தால் பெருமிதம் அடைந்திருப்பார். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.