டமால் டுமீல்.. சத்தமாக ‘பாம்’ போடுபவருக்கு ரூ. 5,000 பரிசு.. மியூசிக்கா போட்டா கோப்பை
குஜராத்தில் வாயு பிரியும் வித்தியாசமான போட்டி ஒன்று நேற்று நடைபெற்றது.
சூரத்: குஜராத்தில் நடைபெற்ற வாயு பிரிதல் போட்டியை பார்க்க ஏராளமானோர் கூடியிருந்த நிலையில் போட்டியில் கலந்து கொள்ள யாரும் முன்வராதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தை சேர்ந்தவர் பாடகர் யதின் சங்கோய். இவர் வாயு தொல்லையால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறார். பொது இடத்தில் வாயு பிரிவதால் பலமுறை அவமானப்பட்டுள்ளார்.
வாயு பிரிதல் என்பது நமது உடலின் செயல்பாடுகளில் தினந்தோறும் நடைபெறும் ஒன்று தான். அதை ஏன் அவமானமாக எடுத்துகொள்ள வேண்டும் என யோசித்த யதின் சங்கோய், தனது நண்பர் முல் சங்வி என்பவருடன் சேர்ந்து, வாயு பிரிதல் பேட்டியை நடத்த முடிவு செய்தார்.
வெற்றியாளர்
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார் யதின். அது முதலே செய்திகளில் அதிகம் அடிப்பட்டது இந்த வித்தியாசமான போட்டி. இதனால் இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது. யார் சத்தமாக, அதிக நேரம், அதிக முறை பின்பக்கமாக வாயு விடுகிறார்களோ அவர்களே போட்டியின் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது.
60 பேர் முன்பதிவு
இதனால் ஏகப்பட்டப் பேர் வந்து டமால் , டுமில் என சத்தமாக பாம் போட்டு, அனைவரையும் மூக்கு மேல் விரல் வைத்த வைத்து அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே, போட்டியில் கலந்து கொள்வதற்காக சுமார் 60 பேர் தலா ரூ.100 கொடுத்து பதிவு செய்தனர்.
ஏமாற்றிய போட்டியாளர்கள்
திட்டமிட்டப்படி குஜராத்தின் வெசு நகரில் உள்ள ஓரு ஹாலில் போட்டி நடைபெற்றது. போட்டியை பார்ப்பதற்காக ஏகப்பட்டப் பேர் அந்த அரங்கில் கூடியிருந்தனர். ஆனால் எதிர்பார்த்தது போல் போட்டியாளர்கள் தான் வரவில்லை.
தொழிலதிபர்
இந்த போட்டியில் மொத்தமே மூன்று பேர் தான் கலந்துகொண்டனர். முதலில் மேடை ஏறிய பார்தோளியை சேர்ந்த் தொழிலதிபர் சுஷில் ஜெயின், வாயுவை பிரிக்க முயன்றார். ஆனால் அரங்கில் ஏகப்பட்ட கேமராக்களால், கூச்சத்தில் இருந்தால் அவருக்கு வாயு வெளியேறவில்லை.
ஏமாந்த பார்வையாளர்கள்
இரண்டாவதாக, பள்ளிக்கூடம் நடத்தும் அல்கேஷ் பாண்டியா களமிறங்கினார். பலமுறை முயற்சி செய்தும் அவராலும் வாயு பிரிக்க முடியவில்லை. இதையடுத்து போட்டி முடியும் சமயத்தில் களமிறங்கினார் விஷ்ணு ஹேதா. இவரிடம் இருந்தாவது ஏதாவது சத்தம் வரும் பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவரும் ஏமாற்றத்தையே தந்தார்.
மீண்டும் போட்டி
கடைசியில் வேறு வழியே இல்லாமல் போட்டியில் கலந்து கொண்ட மூன்று பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆனால் இதை எல்லாம் வைத்து தான் தளர்வடைய மாட்டேன் என தெரிவித்துள்ள போட்டி ஒருங்கிணைப்பாளர் யதின், வெகு விரைவில் மீண்டும் இதே போட்டி நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.