கேரளாவில் ஹெல்மெட் அணிந்தால்தான் பைக்குகளுக்கு பெட்ரோல்... ஆகஸ்ட் முதல் அமல்
திருவனந்தபுரம்: கேரளாவில் அதிகரித்து வரும் விபத்துகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதல் முதல் பெட்ரோல் வழங்கக்கூடாது என கேரள அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து கேரள போக்குவரத்து ஆணையர் டோமின் ஜே தச்சாங்கரி கூறுகையில், ஹெல்மெட் அணியாமல் இருச்சக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களிடம் விவாதிக்கப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய மாநகராட்சிகளில் சோதனை அடிப்படையில் ஆக.,1-ந் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.
கேரளாவில் சாலை விபத்தினால் உயிரிழப்பவர்களில் 50% பேர் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள். மேலும் 80% பேர் தலையில் ஏற்படும் காயங்களினால் தான் உயிரிழக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.