நாடு முழுவதும் மேலும் 3 நாட்களுக்கு சுங்கக் கட்டணம் ரத்து
நாடு முழுவதும் மேலும் 3 நாட்களுக்கு சுங்கக் கட்டணம் ரத்து என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகாத நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் நவம்பர் 14ம் தேதி வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி 8ம் தேதி இரவு அறிவித்தார். இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து கையில் இருந்த பணத்தை செலவு செய்ய முடியாத சூழல் உருவானது. மேலும் வங்கியும் முதல் நாள் விடுமுறை அளிக்கப்பட்டு நேற்றில் இருந்துதான் இயங்கி வருகிறது. மேலும், ஏடிஎம்களும் 2 நாட்களாக இயங்கவில்லை.
இதனால் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை செலுத்தும் வாகன ஓட்டிகள் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செலுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள். இதன் காரணமாக பல சுங்கச்சாவடிகளில் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சினையை சமாளிப்பதற்காக சில இடங்களில் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.
இந்நிலையில், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி அறிவித்தார். இதனையடுத்து வாகன ஓட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக சிரமம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டி வந்தனர்.
இன்று நள்ளிரவோடு இந்த சுங்கக் கட்டணம் ரத்து முடிவடைய உள்ளதால், மீண்டும் 3 நாட்களுக்கு அதாவது நவம்பர் 14ம் தேதி நள்ளிரவு வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.