வரலாற்று ஆவணங்கள் எதையும் உள்துறை அமைச்சகம் அழிக்கவில்லை: ராஜ்நாத்சிங்
டெல்லி: வரலாற்று ஆவணங்கள் எதனையுமே உள்துறை அமைச்சகம் அழித்துவிடவில்லை என்று அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.
மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்த உடன் உள்துறை அமைச்சகத்தில் மகாத்மா காந்தி கொலை ஆவணம் உள்ளிட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் அழிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இது குறித்து எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினர்.
அப்போது சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குறுக்கிட்டு, எந்த ஒரு வரலாற்று கோப்பும் அழிக்கப்படவில்லை என்றார். இந்த நிலையில் இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜ்யசபாவில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், மகாத்மா காந்த் கொலை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து வரலாற்று ஆவணங்களுமே மிகவும் பாதுகாப்பாகவே இருக்கின்றன. வரலாற்று முக்கியத்துவம் இல்லாத 11 ஆயிரத்து 100 ஆவணங்கள்தான் அழிக்கப்பட்டன என்று விளக்கம் அளித்துள்ளார்.