பாக். சுதந்திர தினம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் இல்லை
வாகா: பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது எல்லை பாதுகாப்பு படையினருக்கு இனிப்புகளை வழங்கும் வழக்கமான நிகழ்ச்சிகள் இன்று நடைபெறவில்லை.
பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி-வாகா எல்லையில் இருநாட்டு வீர்ர்களின் கொடியேற்ற நிகழ்ச்சிகளை ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் கண்டு சிலிர்ப்படைவர். அதேபோல் இந்து, முஸ்லிம் பண்டிகைகள், இருநாட்டு சுதந்திர தினங்களின் போதும் இனிப்புகள் பரிமாறப்படுவது வழக்கம்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதால் பாகிஸ்தான் கடும் அதிருப்தியில் உள்ளது. நமது நாட்டின் தூதரை திருப்பி அனுப்பியிருக்கிறது.
மேலும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரங்குக்கும் எடுத்துச் செல்ல இருக்கிறது. இதனால் இருநாட்டு உறவுகளிடையே கொந்தளிப்பான நிலை உள்ளது. இருநாடுகளிடையேயான ரயில், பேருந்து போக்குவரத்து முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் பக்ரீத் பண்டிகையின் போதும் வாகா எல்லையில் இனிப்புகள் பரிமாறப்படவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டியும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகள் வழங்கும் வழக்கமான நிகழ்வு நடைபெறவில்லை.