அதெப்படி துணை முதல்வருக்கு ‘ஐஸ்கிரீம்’ தர மறக்கலாம்... என்ஜினீயர்களுக்கு மகா. அரசு நோட்டீஸ்!
அவுரங்காபாத்: மராட்டிய மாநில துணை முதல்வருக்கு ஐஸ்கீரிம் இல்லாமல் மதிய உணவு வழங்கியதாக, பொதுப்பணித் துறையைச் சேர்ந்த இரண்டு என்ஜினீயர்களுக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் ஆளும் கட்சியான தேசியவாத காங்கிரஸ் தோல்வி அடைந்தது. தோல்விக்கானக் காரணம் குறித்து கட்சியின் மூத்தத் தலைவர்கள் கட்சியினரை சந்தித்து வருகின்றனர்.
இது தொடர்பாக, கடந்த திங்களன்று மராட்டிய மாநில துணை முதல்வர் அஜித் பவாரும் ஜால்னா சென்று கட்சியின் பிரமுகர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மதிய உணவு...
அஜித் பவார் தனது ஜால்னா பயணத்தின் போது, அவுரங்காபாத்தில் மாநில அரசுக்குச் சொந்தமான தங்கும் விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.
ஐஸ்கிரீம் இல்லை...
அப்போது அவருக்குப் பரிமாறப்பட்ட உணவில் ஐஸ்கிரீம் வைக்க விடுதி அதிகாரிகள் மறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அஜித் பவார் ஒன்றும் கூறாமல் சாப்பிட்டு விட்டுச் சென்று விட்டார்.
நோட்டீஸ்...
ஆனால், துணை முதல்வருக்கு ஐஸ்கிரீம் பரிமாறால் விடப்பட்டது தொடர்பாக, அவரது ஆதரவாளர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். உடனடியாக இது தொடர்பாக பொதுப்பணி துறை என்ஜினீயர் 2 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
விளக்கம்...
இது தொடர்பாக அவுரங்காபாத் அரசு விடுதியின் மூத்த என்ஜினீயர் ஒருவர் கூறுகையில், ‘ஒருங்கிணைப்பாளர்களே உணவை தயார் செய்தனர். அதில் இனிப்பு இருந்ததா, ஐஸ்கிரீம் இருந்ததா என்பது எனக்கு தெரியாது. சம்பவத்தின்போது நான் அங்கு இல்லை" என விளக்கமளித்துள்ளார்.
கண்டனம்...
ஐஸ்கிரீம் தரப்படாததற்காக என்ஜினீயர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தை பாரதீய ஜனதா கட்சி விமர்ச்சித்துள்ளது. ஆனால், இது தொடர்பாக கருத்துக் கூற தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மறுத்துவிட்டனர்.