நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை கைவிட முடியாது.. கட்காரி திட்டவட்டம்
சுங்க கட்டணத்தை தற்போதைக்கு கைவிடும் வாய்ப்பு இல்லை என்று நிதின் கட்காரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புனே: தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் என்பது நீண்டகாலத்திற்கு நீடிக்கக் கூடாது என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால் சாலைகளை சரியான முறையில் பராமரிக்கவும், வாகன ஓட்டிகள் தரமான சாலைகளை பயன்படுத்தவும், சுங்கக்கட்டணம் என்பது அவசியமான ஒன்றாகும் என்றார்.
புனேவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். உலகம் முழுவதுமே, தரமான சாலைகள், விரைவான பயணம், எரிபொருள் சேமிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நல்ல சேவை வேண்டுமென்றால், அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ஒரு காலத்தில் மும்பையில் இருந்து புனே செல்வதற்கு, கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு இடையே, 9 மணி நேரம் வரை ஆனது. ஆனால், தற்போது தடையின்றி 2 மணி நேரத்தில் பயணம் செய்யும் சூழல் உள்ளது. சுங்க கட்டணத்தை கைவிட வேண்டும் என்பதில் நானும் உடன்படுகிறேன். ஆனால் தற்போதைய சூழலில் சுங்கக் கட்டணத்தை கைவிடுவதற்கான வாய்ப்பு இல்லை" என்றார்.