பாதிப்பு இல்லை.. ஹைட்ரோகார்பன் எடுத்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்யலாம்: மத்திய அரசு விளக்கம்
டெல்லி: ஹைட்ரோகார்பன் திட்டத்தால் விவசாயத்துற்கு பாதிப்பு கிடையாது என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த சில வாரங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புகள் வலுத்துக்கொண்டு வருகின்றன.
கடந்த 2 நாட்களாக தீவிரம் அடைந்துள்ள போராட்டம் நேற்று உச்சக்கட்டத்தை எட்டியது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உருவான தன்னெ ழுச்சி போராட்டம் போல் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிராகவும் அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டனர்.
இந்நிலையில் பெட்ரோலிய துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
*3200 அடி ஆழத்திற்கும் கீழே இருந்து எரிவாயு எடுப்பதால் மேலேயுள்ள நிலத்தடி நீர்மட்டத்திற்கு எந்த பாதிப்பும் வராது.
*எரிவாயு திட்டத்திற்கு 1461 சதுர கி.மீ என்ற அளவில், சிறு அளவிலான நிலம்தான் தேவைப்படுகிறது.
*700 சிறு கிணறுகள் மூலம் இப்பணி நடக்கும்.
*ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நிலங்களை 3 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்
*ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழக அரசுக்கு ரூ.40 கோடி ராயல்டி கிடைக்கும்
*இத்திட்டத்தால் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கெனவே உள்ள எண்ணெய்க் கிணறுகளால் விவசாயம் பாதிக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.