சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இந்தியப் பயணிகள் யாருமில்லை: மத்திய அரசு
டெல்லி: சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் இந்திய நாட்டைச் சேர்ந்த பயணிகள் எவரும் இல்லை என்று மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் அசோக் கஜபதிராஜூ தெரிவித்துள்ளார்.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17, நேற்று உக்ரைனில் ரஷ்ய எல்லைக்கு அருகே செல்கையில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படை தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த விமானத்தில் பயணம் செய்த 15 ஊழியர்களும், 280 பயணிகளும் உடல்கருகி உயிரிழந்தனர்.
இந்தியப் பயணிகள் எவரும் இந்த விமானத்தில் பயணிக்கவில்லை என்று மத்திய விமானப்போக்குவரத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளி
அதேசமயம் ஊழியர்களில் மலேசியாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தமிழரான பிரமீளா என்ற ஏர்ஹோஸ்டஸ் இந்த விமானத்தில் பயணித்து பலியாகியுள்ளார். அதே போல 41 வயதான சஞ்சித் சிங் சந்து என்ற இந்திய வம்சாவளி சீக்கிய ஊழியரும் இந்த விமானத்தில் பயணித்துள்ளார்.
நெதர்லாந்து பயணிகள்
விமானத்தில் பயணம் செய்த 280 பயணிகளில் 154 பேர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியா பயணிகள்
இவர்கள் தவிர 27 ஆஸ்திரேலியப் பயணிகள், 23 மலேசியப் பயணிகள், 11 இந்தோனேசியப் பயணிகள், 6 இங்கிலாந்து பயணிகள், 4 பெல்ஜியம் பயணிகள், 3 பிலிப்பைன்ஸ் பயணிகள் மற்றும் ஒரு பயணி ஆகியோரும் இதில் அடங்குவர்.
அடையாளம் தெரியாத 47 பேர்
விபத்தில் சிக்கி உயிரிழந்த 47 பயணிகளின் விவரம் இதுவரை சரிவர தெரியவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.