ஜம்மு-காஷ்மீரில் 30 ஆண்டுகளில் முதல்முறை.. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நிகழ்ந்த அதிசயம்
ஸ்ரீநகர்: மத்திய அரசு சார்பில் யார் வந்தாலும் ஜம்மு காஷ்மீரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கும் பிரிவினைவாதிகள், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மட்டும் முதல்முறையாக முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் தேசிய தலைவருமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளார். கோடை காலத்து தலைநகரான ஸ்ரீநகர் சென்ற அமித் ஷா, காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஜுலை முதல் வாரத்தில் துவங்கும் அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு எற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிகாரிகளிடம் அமித்ஷா, பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதனிடையே கடந்த 30 ஆண்டுகளில் மத்திய அரசின் சார்பில் எந்த பிரதிநிதிகள் காஷ்மீர் மாநிலத்திற்கு வந்தாலும் பிரிவினைவாத தலைவர்கள் முழு அடைப்புக்கு அழைப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி ஸ்தம்பிக்க வைப்பார்கள்.
இப்படித்தான் கடந்த பிப்ரவரி 3ம் தேதி பிரதமர் மோடி காஷ்மீர் வருகையின் போது முழு அடைப்புக்கு பிரிவினை வாத இயக்கங்களின் கூட்டுக்குழு தவைர்களான கிலானி, மிர்வாஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த யாஷின் மாலிக் உள்ளிட்டோர் அழைப்பு விடுத்திருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் வந்த போதும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
இதன்காரணமாக புதன்கிழமை காஷ்மீர் வந்த அமித்ஷாவுக்கு எதிப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹரியத் மாநாடு அமைப்பைச் சேர்ந்த சையத் அலி ஷா கிலானி மற்றும் மிர்வாஸ் உமர் பாருக் உள்பட எந்த ஒரு பிரிவினைவாத தலைவர்களும் நேற்று அமித்ஷாவுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனை பார்த்து காஷ்மீர் மக்களே ஆச்சர்யம் அடைந்தனர்.