இனி திருப்பதியில் இலவச லட்டு கிடையாது.. நடைபாதை பக்தர்கள் அதிர்ச்சி
திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் நடைபாதை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த லட்டு இனிமேல் வழங்கப்படமாட்டாது என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் புகழ் பெற்ற கோவில்களில் முதன்மையானது திருப்பதி வெங்கடாஜலபதி.. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்ய செல்கின்றனர்.
மேலும் இந்தியாவில் உள்ள சாதாரண குடிமகன் முதல் முதல்குடிமகனான ஜனாபதி வரை இந்த கோவிலுக்கு விரும்பி செல்வதால், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமையானை தரிசிக்க பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விடுமுறை நாள்களின் போது பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக மட்டும் 50 ஆயிரம் லட்டுகள் வரை இலவசமாக வழங்கப்பட வேண்டி உள்ளது.
இவ்வாறு இலவசமாக லட்டு விநியோகிப்பதால் தேவஸ்தானத்திற்கு தினசரி ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே இலவச லட்டு வழங்குவதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் மட்டும் இலவச லட்டு வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது