ஜல்லிக்கட்டு- எங்கேயும் தடியடியே நடக்கவில்லை- ஓபிஎஸ் அண்டப் புளுகு
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளின் போது எங்கேயும் தடியடியே நடக்கவில்லை என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார்.
டெல்லி: ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் எங்கேயும் போலீசார் தடியடியே நடத்தவில்லை என பொய்மூட்டையை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தடையை மீறி தமிழர் பண்பாட்டு உரிமை நிலைநாட்டப்பட்டது.
இருப்பினும் சட்டப்பூர்வமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த தமிழ் தேசிய இனமே இன்று போராடி வருகிறது. ஒருநாள் போராட்டமாக இல்லாமல் பல நாட்களாக அலங்காநல்லூரிலும் சென்னை மெரினாவிலும் மதுர, நெல்லை, சேலம், கோவை மைதானங்களிலும் பசியும் பட்டினியுமாக தமிழ்நாட்டு இளைஞர்கள் போராடி வருகின்றனர்.
ஆனால் இந்திய மத்திய பாஜக அரசு இந்த போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்திய மத்திய அரசு மீது தமிழக இளைஞர்கள் மிக கடுமையான அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். ஆனால் மோடியோ ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதை காரணம் காட்டி நீங்க எதாவது செய்தால் நாங்க ஒத்துழைப்பு தருகிறோம் என்று மட்டும் கூறிவிட்டார். இதனால் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது உறுதியாகிவிட்டது.
இச்சந்திப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். அப்போது, ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என நீங்கள் உறுதி மொழி அளித்தீர்கள்; ஆனால் உங்களது காவல்துறை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தியோர் மீது தடியடி நடத்தியது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், தடியடியே நடக்கவில்லை என புன்னகைத்தபடி அண்டப் புளுகை அள்ளிவிட்டார்.
ஓ. பன்னீர்செல்வத்தின் இந்த பொய் பேச்சு தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.