பாகிஸ்தானுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ பயிற்சியில் ஈடுபடவில்லை: ரஷ்யா விளக்கம்
டெல்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானுடன் இணைந்து ராணுவ பயிற்சி எதிலும் ஈடுபடவில்லை என்று டெல்லியில் உள்ள ரஷ்யா தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
ரஷ்யா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான ராணுவ கூட்டு பயிற்சி முகாம் முதல் முறையாக நடக்க உள்ளதையடுத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளனர். பிரண்ட்ஷிப் 2016 என்று அழைக்கப்பட்ட இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் ரஷ்யாவின் 200 ராணுவ வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். பாகிஸ்தான் ஆயுதப்படைகள் ஊடக பிரிவு இத்தகவலை ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
செப்டம்பர் 24 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 7 ஆம் தேதி வரை இரண்டு வார காலம் நடைபெறும் இந்த ராணுவ பயிற்சி குறித்து விரிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக அறியப்பட்ட ரஷ்யா பாகிஸ்தானுடன் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது உலக அளவில் கவனிக்கப்பட்டது.
இந்த பயிற்சி குறித்து பாகிஸ்தான் தூதர் கூறும்போது இருதரப்பு பாதுகாப்பு மற்றும் இராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஏற்படுத்தும் மலைப் பகுதிகளில் இந்த முகாம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த ராணுவ பயிற்சி நடைபெறவுள்ளதாகவும் இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் கிளம்பியது.
இந்த நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ பயிற்சி எதிலும் ஈடுபடவில்லை என்று ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. ராணுவ பயிற்சி பாகிஸ்தானின் மலைப்பிரதேசமான சேரட்டில் மட்டுமே நடைபெறுவதாகவும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராட்டு ராணுவ பயிற்சி பள்ளியில் ராணுவ பயிற்சி நடைபெறுவதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் எல்லையில் யூரி பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் ரஷ்ய - பாகிஸ்தான் படையினர் கூட்டுப் பயிற்சி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.