ஒபாமா தாஜ்மகாலை பார்க்க செல்லாததால் ஆக்ரா மக்களுக்கு நிம்மதி!
ஆக்ரா: தாஜ்மகாலை பார்த்து ரசிக்க அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டமிட்டிருந்ததால், ஆக்ரா நகரில் 3 மணி நேரத்திற்கு செல்போன் இணைப்புகள் ஜாம் செய்ப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிபரின் பயணம் ரத்து செய்யப்பட்டதால், மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று மாலை அமெரிக்காவில் இருந்து விமானத்தில் புறப்பட்டு, நாளை காலை டெல்லி வருகிறார். குடியரசு தலைவர் மாளிகை வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மகாத்மா காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தும் ஒபாமா, பின்னர் பிரதமர் நரேந்திரமோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதன்பிறகு திங்கள்கிழமை குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஒபாமா, செவ்வாய்க்கிழமை ஆக்ராவிற்கு சென்று தாஜ்மஹாலை பார்த்து ரசிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒபாமாவின் பாதுகாப்புக்காக ஆக்ராவில் ஒபாமா பயணிக்கும் பகுதிகளில் சக்தி வாய்ந்த ஜாமர்கள் பொருத்தப்பட உத்தரவிடப்பட்டிருந்தது. எனவே 3 மணி நேரத்திற்கு, செல்போன் இணைப்புகள் கூட யாருக்கும் கிடைக்கப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, தாஜ் கஞ்ச், தி மால் ரோடு, பதேகாபாத் ரோடு போன்ற பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனவே 3 மணி நேரத்திற்கு, ஒபாமா உட்பட ஆக்ரா மக்கள் அனைவரும் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனிடையே, ஆக்ரா விசிட்டை கேன்சல் செய்துவிட்டு சவுதி அரேபியா செல்ல ஒபாமா திடீரென முடிவெடுத்தார். எனவே, ஆக்ராவில் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன.
வழக்கம்போல செவ்வாய்க்கிழமை செல்போனும் வேலை செய்யும். எனவே ஒபாமா வராததால் ஆக்ரா மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.