மேற்கு வங்கத்தில் அடங்கி, ஒடுங்கிப் போன மோடி அலை
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 199 இடங்களில் தற்போது முன்னிலையில் இருந்து வருகிறது. அங்கு மோடி அலை அடங்கிவிட்டது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 10 மணி நிலவரப்படி 199 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் 41 இடங்களிலும், இடதுசாரிகள் 38 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மாநில முதல்வருமான மமதா பானர்ஜியை தாக்கிப் பேசினார்.
சாரதா ஊழல், நாரதா ஸ்டிங் ஆபரேஷன், கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து என்று மமதாவின் ஆட்சியில் நடந்தவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்து தங்களுக்கு வாக்களிக்குமாறு மோடி மக்களை கேட்டுக் கொண்டார்.
தற்போதைய நிலவரத்தை பார்க்கையில் மோடியின் பேச்சை யாரும் கேட்டதாக தெரியவில்லை. மேற்கு வங்கத்தில் மோடி அலை ஒர்க்அவுட் ஆகவில்லை.