கஜானா காலி.. சாலை போட லோன் கேட்டாலும் கொடுப்பதில்லை.. மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் நிலை!
இந்தியாவில் ''பாரத்மாலா'' திட்டத்தின் கீழ் சாலை அமைக்க போதிய நிதி இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
டெல்லி: இந்தியாவில் ''பாரத்மாலா'' திட்டத்தின் கீழ் சாலை அமைக்க போதிய நிதி இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்திய அரசு தற்போது மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தையும், பெட்ரோல் டீசலில் வரும் கூடுதல் வரியையும் மட்டுமே நம்பி உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் சாலை திட்ட பணிகள் எதற்கும் போதிய நிதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதற்காக கடன் கேட்டும் வங்கிகள் அளிப்பதில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதனால் இந்தியாவில் சாலைப்பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளது.
இந்தியா திட்டம்
இந்தியாவில் மாநிலங்களை சாலையால் இணைக்கும் திட்டம் பெரிய அளவில் போடப்பட்டு இருக்கிறது. மத்திய மோடி அரசு, இதற்காக பாரத்மாலா என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 35,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை போடப்பட உள்ளது. மொத்தமாக 2022க்குள் இந்தியா முழுக்க 84,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை போடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பணம் இல்லை
ஆனால், இந்த சாலையை போட கொஞ்சம் கூட நிதி இல்லை என்று கூறியுள்ளது, மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம். ஆம், இந்த சாலையை போட போதிய நிதி இல்லை என்று அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதற்காக எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளிடம் கடன் வாங்கி இருப்பதாக அரசு கூறியுள்ளது. ஆனால் இந்த திட்டங்களை செயல்படுத்த இந்த பணம் போதாது என்றும் கூறப்படுகிறது.
கடன் நிறைய இருக்கிறது
ஏற்கனவே மத்திய சாலை போக்குவரத்து துறை, ஸ்டேட் வங்கியில் நிறைய கடன் வாங்கியுள்ளது. ஸ்டேட் வங்கியில் மட்டும் 2500 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இது இல்லாமல் இன்னும் சில வங்கிகளிலும் கடன் வாங்கியுள்ளது. ஆனால் இந்த நிதி எல்லாம் பாரத்மாலா திட்டத்தில் பாதியை முடிக்க கூட உதவாது என்று கூறப்படுகிறது.
என்ன காரணம் கொடுப்பதில்லை
இந்த நிலையில் வங்கிகள் யாரும் கடன் கொடுப்பதில்லை என்று அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். ஏற்கனவே கடன் நிறைய இருப்பதால் இப்படி கடன் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். அதேபோல் பொதுவாக வங்கிகள் கொடுத்திருக்கும் கடன் எல்லாம் கட்டுமான துறை சார்ந்ததுதான். இதில் செல்லும் கடன் திரும்ப வருவதில்லை. இதனால் சாலை போடவும் பணம் அளிப்பதில்லை என்று கூறியுள்ளனர்.
தடைபட வாய்ப்புள்ளது
இதனால் மத்திய அரசின் சாலை திட்டங்கள் எல்லாம் தடைபட வாய்ப்புள்ளது. ஏற்கனவே சேலம் - சென்னை 8 வழி சாலை திட்டம் 6 வழி சாலையாக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. போதிய நிதி இல்லாத காரணத்தால் இப்படி செய்யப்படும் என்று அப்போதே விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.