பணம் இல்லை... மனைவியின் உடலை 60 கிமீ தள்ளுவண்டியில் தள்ளிச்சென்ற முதியவர்... தொடரும் சோகம்
தெலுங்கானாவில் முதியவர் ஒருவர் இறந்துபோன தனது மனைவியின் உடலை 60 கிலோ மீட்டர் தள்ளுவண்டியில் தள்ளிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா: தெலுங்கானாவில் ஆம்புலன்ஸுக்கு தர பணம் இல்லாததால் முதியவர் ஒருவர் இறந்துபோன தனது மனைவியின் உடலை 60 கிலோ மீட்டர் தள்ளுவண்டியில் தள்ளிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் சங்கரேடி மாவட்டம் மாய்கோட் கிராமத்தைச் சேர்ந்த வயதான தம்பதி ராமுலு, கவிதா. தொழு நோயால் பாதிக்கப்பட்ட இவர்களை உறவுகள் கைவிடவே பிச்சையெடுத்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
லிங்காம்பள்ளி ரயில்வே நிலையம் அருகே வெள்ளிக்கிழமை காலை உடல்நலக் குறைவு காரணமாக பிச்சையெடுத்துக் கொண்டிருந்தபோது கவிதா திடீரென உயிரிழந்தார். இதையடுத்து சொந்த ஊரில் இறுதி சடங்கு செய்ய நினைத்த ராமுலு, கவிதாவின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்சை அணுகியுள்ளார்.
அவர்கள் 5 ஆயிரம் ரூபாய் கேட்கவே பணம் இல்லாமல் தவித்த ராமுலு தான் பிச்சையெடுக்க பயன்படுத்திய தள்ளுவண்டியில் வைத்து அவரது மனைவியின் சடலத்தை 60 கிலோ மீட்டர் தூரம் அழுது கொண்டே தள்ளிச் சென்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை இரவு வழி தவறிய முதியவர் சனிக்கிழமை பிற்பகல் விக்ராபாத் பகுதிக்கு சென்றார். அங்கு அவரது நிலைமையைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, பணம் வசூலித்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஒடிசாவில் காசநோய் காரணமாக மருத்துவமனையில் இறந்து போன மனைவியின் உடலை 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கணவர் தோளில் சுமந்து சென்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்டுத்திய நிலையில் தற்போது இதேபோல் மேலும் ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.