மத்திய இணையமைச்சர் பதவியிலிருந்து குஷ்வாஹா ராஜினாமா.. ஆர்.எல்.எஸ்.பி- பாஜக கூட்டணி உடைந்தது!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி ( RLSP - Rashtriya Lok Samta Party ) அறிவித்துள்ளது.
Recommended Video
பாட்னா: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி ( RLSP - Rashtriya Lok Samta Party ) அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹா மத்திய இணையமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
பீகாரில் பாஜகவின் நல்ல நண்பனாக இருந்தது ஆர்எல்எஸ்பி (ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி). பீகாரில் இந்த ஆர்எல்எஸ்பி கட்சியை வைத்து பாஜக பல திட்டங்கள் வைத்து இருந்தது.
ஆனால் அனைத்து திட்டங்களும் கனவாய் போகும் வகையில், ஆர்எல்எஸ்பி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளது.
என்ன கூட்டணி
ஆர்எல்எஸ்பி கட்சி தேசிய அளவில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கியமான கட்சி. இந்த கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹா தற்போது மத்திய இணையமைச்சராக இருந்தார். பாஜக அமைச்சரவையில் இவர் மனித வள மேம்பாட்டு துறையின் மத்திய இணையமைச்சராக இருந்தார்.
முடிவு
இந்த நிலையில் தற்போது ஆர்எல்எஸ்பி பாஜக கூட்டணியில் இருந்து இன்று விலகுவதாக அறிவித்து உள்ளது. உபேந்திர குஷ்வஹாவும் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
காரணம் என்ன
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த விவாதம்தான் இந்த பிரச்னைக்கு காரணம். பீகாரில் மொத்தம் 40 லோக் சபா தொகுதிகள் உள்ளது. இதில் பாஜகவும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் சமமான இடங்களை பிரித்துக் கொண்டு ஆர்எல்எஸ்பி கட்சிக்கு 2 இடங்களை மட்டுமே கொடுப்பதாக இருந்தது. இதனால் கோபம் அடைந்த ஆர்எல்எஸ்பி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற முடிவெடுத்து உள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை
பாஜக இன்று தனது கூட்டணி கட்சிகளுடன் கூட்டம் நடத்தியது. இதில் ஆர்எல்எஸ்பி சார்பாக யாரும் கலந்து கொள்ளவில்லை. மற்ற கூட்டணி கட்சியினர் கலந்து கொண்ட போது ஆர்எல்எஸ்பியில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் ஆர்எல்எஸ்பி காங்கிரஸ் கூட்டணியில் சேரப்போவதாகவும் தகவல்கள் வருகிறது.
பாஜக ஏன் அதிர்ச்சி
இதில் பாஜக அதிர்ச்சி கொள்ள முக்கிய காரணம் உள்ளது. குஷ்வஹா என்பது பீகாரில் மிகப்பெரிய சாதி. அங்கு குஷ்வஹா ஜாதியினர்தான் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிக்கும் நபர்களே அங்கு வெற்றிபெற முடியும். இவர்களின் பிரிதிநிதியாக இருக்கும் கட்சியை பாஜக பகைத்துக் கொண்டு இருப்பதால், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பல வகைகளில் மாற வாய்ப்பு இருக்கிறது.