ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை ரத்து செய்ய நிதி ஆயோக் அதிரடி பரிந்துரை
டெல்லி: ரயில்வே துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்று நிதி ஆயோக் குழு பரிந்துரைத்துள்ளது.
பொதுவாக மத்திய அரசின் பட்ஜெட் 2 பாகங்களாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. முதலில் ரயில்வே துறைக்கான பட்ஜெட்டும், அதன்பின் பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1924-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிறது. தற்போது தனி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை ரத்து செய்ய நிதி ஆயோக் குழு பரிந்துரைத்துள்ளது.
நிதி ஆயோக் குழு உறுப்பினர் பிபெக் டெப்ராய் தலைமையிலான குழு பிரதமர் மோடிக்கு அளித்துள்ள 20 பக்க பரிந்துரையில் தனி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் எந்த பயனும் இல்லை; அதை ரத்து செய்துவிட்டு அதை பொதுபட்ஜெட்டுடன் இணைக்க வேண்டும். அப்படி இணைக்கும்போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
தற்போது இக்குழுவின் பரிந்துரை குறித்து கருத்து தெரிவிக்குமாறு ரயில்வே அமைச்சகத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டின் இந்தியாவின் கடைசி ரயில்வே பட்ஜெட்டாக இருக்கும்.
இது குறித்து கருத்து தெரிவித்த ரயில்வே வாரியத்தின் தலைவர் ஏ.கே. மிட்டல், இதேபோல ஏற்கனவே பல குழுக்கள் ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தேவையில்லை என்று பரிந்துரைத்துள்ளன. ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பாதுகாப்பு துறையை விட ரயில்வே துறைக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படலாம். ஆனாலும் இதற்கு சில முக்கியத்துவங்கள் உள்ளன.
தனியாக இதற்கு பட்ஜெட் இருப்பது தான் சிறப்பாக இருக்கும். இந்த விஷயத்தில் ஒரு நாள் இரவிலேயே எல்லா முடிவையும் எடுத்துவிட முடியாது. நீண்ட ஆய்வு செய்து தான் முடிவு எடுக்க முடியும் என்றார்.