நீட் வினாத்தாள் குளறுபடி.. இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது.. சுப்ரீம்கோர்ட் ஷாக் உத்தரவு
நீட் தமிழ் வினாத்தாள் வழக்கில் கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெல்லி: நீட் தமிழ் வினாத்தாள் குளறுபடி வழக்கில் கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வை, 13 லட்சம் மாணவ மாணவியர் எழுதினர்.
தமிழகத்தில் இருந்து மாணவர்கள் 1.07 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது.
வினாத்தாள் குளறுபடி
இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்ததில் பிழைகள் இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். நீட் தேர்வில் தமிழில் மொழி பெயர்த்ததில் 49 கேள்விகளில் பிழை என டி.கே.ரங்கராஜன் எம்.பி வழக்கு தொடர்ந்தார்.
சிபிஎஸ்இ மேல்முறையீடு
இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற கிளையின் இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது.
சிபிஎஸ்இ குற்றச்சாட்டு
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றது. மேலும் மருத்துவ படிப்பு முழுவதும் ஆங்கிலத்தில் தான் உள்ளது என்ற சிபிஎஸ்இ, ஆரம்பத்தில் இருந்தே தமிழகம் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டியது.
கூடுதல் மதிப்பெண் கிடையாது
இதனைக்கேட்ட உச்சநீதிமன்றம் நீட் தமிழ் வினாத்தாள் குளறுபடிக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க முடியாது என கைவிரித்துள்ளது. தவறான வினாக்களுக்கு இந்த ஆண்டு எந்த சலுகையும் வழங்க முடியாது என்றும் சுப்ரீம்கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.