"ஒரு தேசம் ஒரு எண்" கனவு நனவானது... இன்று முதல் பி.எஸ்.என்.எல் ரோமிங் முழுக்க முழுக்க ஃப்ரீ!
டெல்லி: பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் ஒரே கட்டணத்தில் பேசும் இலவச ரோமிங் சலுகை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் ரோமிங் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். நாடு முழுவதும் ஒரே கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், தனியார் நிறுவனங்களின் எதிர்ப்பு காரணமாக இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதனால், ஒரு மாநிலத்தைவிட்டு இன்னொரு மாநிலத்திற்குச் செல்லும் செல்போன் வாடிக்கையாளர்கள், பல மடங்கு கட்டணம் செலுத்தும் நிலை காணப்படுகிறது.
இந்நிலையில், மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ''பி.எஸ்.என்.எல் செல்போன் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 15 ஆம் தேதி முதல் ரோமிங் கட்டணம் ரத்தாகிறது" என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று முதல் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்தப்பகுதியில் இருந்து அவுட்கோயிங் செய்தாலும், ஏற்கனவே உள்ள திட்டத்தின்படி கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல், இன்கமிங் கால்களுக்கு கட்டணம் கிடையாது.
இந்த இலவச ரோமிங் சலுகை ஓராண்டு வரை இருக்கும். இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் பி.எஸ்.என்.எல் தகவல் அனுப்பி வருகிறது.
இது தொடர்பாக, பி.எஸ்.என்.எல்., தலைமை மேலாண்மை இயக்குனர் அனுபம் ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
ரோமிங் கட்டணத்தை தவிர்க்க, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் பல சிம் கார்டுகளையும், ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் போன்களையும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை. வெளி மாநிலங்களுக்கு செல்லும் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், ரோமிங் கூடுதல் கட்டண பயமின்றி, தமக்கு வரும் மொபைல் போன் அழைப்புகளை ஏற்று எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்.
இதன் மூலம், 'ஒரு தேசம்; ஒரு எண்' என்ற கனவு, நனவாகி உள்ளது. மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ஒப்புதல் பெற்று, இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 7.72 கோடி மொபைல் போன் சந்தாதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.