ஆக.15 முதல் கார், சிறிய ரக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் ரத்து - குஜராத் அரசு அறிவிப்பு
குஜராத்: குஜராத் மாநிலத்தில் கார்கள் மற்றும் சிறு வாகனங்களுக்கு வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் சுங்க கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஆனந்திபென் பட்டேல் அறிவித்துள்ளார்.
சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பார்தோலி பிரபு வசாவா மற்றும் குஜராத் மாநில அமைச்சர் கண்டி கமித் ஆகியோர் ஜுலை 9-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் ஹசிரா-நாக்பூர் இடையே உள்ள சோன்கத் சுங்கச்சாவடியில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, முன்னதாக ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தான் சுங்கக்கட்டண உயர்வுக்கு காரணம் என குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டமானது எங்களது பாஜக ஆட்சிக்கு எதிரானது அல்ல என்றும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட சுங்கக் கட்டணம் தொடர்பான ஒப்பந்தத்திற்கு எதிரானது என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கார்கள் மற்றும் சிறு வாகனங்களுக்கு வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் சுங்கக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஆனந்தி பென் பட்டேல் அறிவித்துள்ளார்.
Happy to announce that from 15th August ,cars and small vehicles will be exempt from paying toll tax in Gujarat .
— Anandiben Patel (@anandibenpatel) July 30, 2016
இது தொடர்பாக குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: குஜராத் மாநிலத்தில் ஆக.15 -ந் தேதி முதல் கார் மற்றும் சிறிய வகை வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதை மகிழ்சியுடன் அறிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதேநேரத்தில், கனரக வாகனங்கள், பேருந்துகள் போன்றவற்றிற்கு வழக்கம் போல சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிகிறது.