வங்கி லாக்கர்களை பறிமுதல் செய்ய திட்டமா? நிதி அமைச்சகம் விளக்கம்
வங்கி லாக்கர்களை பறிமுதல் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி: வங்கி லாக்கர்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தங்க, வைர நகைகளை பறிமுதல் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை எனவும், அவ்வாறு வெளியாகியுள்ள செய்திகள் வெறும் வதந்தி என்றும் நிதி அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி நள்ளிரவு முதல் 500. 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த அதிவலையில் இருந்து மக்கள் மீண்டு இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை. அதற்குள்ளாக கருப்புப் பண ஒழிப்பில் அடுத்த கட்டமாக பேங்க் லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும் நகைகள் 600 கிராமுக்கு மேல் இருந்தால், அதற்கு முறையான ஆவணங்கள் காண்பிக்கப்பட வேண்டும்.
வங்கி லாக்கர்களில் குறிப்பிட்ட கிராம்களுக்கு மேல் நகை வைத்திருப்பவர்கள், அதற்கு சரியான ஆவணங்களை காட்ட வேண்டும் என மத்திய அரசு விரைவில் அறிவிக்ககப்போவதாக செய்திகள் உலா வந்தன. அதேபோல் விரைவில் 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுக்களையும் செல்லாது என மோடி அறிவிக்க உள்ளார் எனவும் வதந்திகள் பரவின.
மேலும், ரூ.2000 நோட்டு மோசமான தரத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது, சாயம் போகிறது, பாதுகாப்பு இல்லாதது, என்றெல்லாம் வகை, வகையாக வதந்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அதில் உண்மை இல்லை எனவும், அது வெறும் வதந்திதான் எனவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வைத்திருக்கும் லாக்கர்களை பறிமுதல் செய்யப்போவதாக பரவி வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. சிலர் சமூக ஊடகங்களில் திட்டமிட்டே இதுபோன்ற தகவல்களை பரப்பி வருகின்றனர்.
வங்கி லாக்கர்களில் உள்ள தங்க, வைர நகைகளை பறிமுதல் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை எனவும், 2000 ரூபாய் நோட்டு பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளது. 2000 ரூபாய் நோட்டை பொறுத்த வரையில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளவாறே அச்சிடப்பட்டுள்ளது என நிதி அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.