காஷ்மீரில் மொகரம் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை! கடும் தடை உத்தரவுகள் அமல்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மொகரம் தின ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் ஊரடங்கு போன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் நாளை மொகரம் தினத்தை கடைபிடிக்க உள்ளனர். ஆனால் ஜம்மு காஷ்மீரில் மொகரம் ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
1980களில் ஜம்மு காஷ்மீரில் மொகரம் ஊர்வலங்களில் இந்திய அரசுக்கு எதிரான முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டன. மேலும் தீவிரவாதம் தலைதூக்கியதால் 1989-ல் மொகரம் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டன.
மொகரம் ஊர்வலம் அனுமதி இல்லை
இருப்பினும் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் ஶ்ரீநகர், பட்காம் மற்றும் பாரமுல்லாவில் மட்டும் இந்த ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இம்முறை ஜம்மு காஷ்மீரில் எந்த ஒரு இடத்திலும் மொகரம் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை.
ஶ்ரீநகரில் கடும் கட்டுப்பாடுகள்
ஶ்ரீநகரில் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முள்கம்பிகளைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பெருமளவு துணை ராணுவப் படையினரும் போலீசாரும் குவிக்கப்பட்டுளனர். துணை ராணுவத்தினர் டிரக் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
ஶ்ரீநகரில் கறுப்பு கொடிகள்
1990களுக்குப் பின்னர் இதுபோன்ற கட்டுப்பாடுகள் தற்போதுதான் விதிக்கப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் ஶ்ரீநகர் வீதிகளில் கறுப்பு கொடிகள், பதாகைகள் தொங்கவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீட்டுக் காவலுக்கு மாற்றம்
மேலும் ஊரடங்கு உத்தரவு போன்ற தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மொகரம் நல்லெண்ண நடவடிக்கையாக முன்னாள் அமைச்சர் இம்ரான் அன்சாரி உள்ளிட்ட ஹோட்டல்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஷியா தலைவர்கள் சிலர் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.