முல்லைப் பெரியாறு அணையை கேரள போலீசாரால் தான் திறமையாக பாதுகாக்க முடியும்: உம்மன்சாண்டி
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையை மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாக்க தேவையில்லை என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
கேரள மாநில நலன் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்த அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி செவ்வாய்கிழமை டெல்லி வந்தார். 2 நாள் பயணமாக டெல்லி வந்துள்ள அவர் பிரதமர் நரேந்திர மோடி, கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோரை சந்தித்து பேசினார்.
அதன் பிறகு அவர் கேரளா ஹவுஸில் செய்தியளார்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
முல்லைப் பெரியாறு அணை கேரள எல்லைக்குள் உள்ளது. அதனால் அணையை பாதுகாப்பது கேரள அரசின் கடமை ஆகும். அணையை கேரள மாநில போலீசாரால் தான் முழுமையாக பாதுகாக்க முடியும்.
முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த தேவையில்லை என்றார்.
முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்கும் பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. கடந்த மாதம் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் தான் உம்மன்சாண்டி அணையை கேரள போலீசாரால் தான் திறமையாக பாதுகாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.