நாய்க் குட்டியின் வாயில் துணியை அடைத்து, உயிர் போகும் வரை அடித்தார்...!
மும்பை: மும்பை உயர் அதிகாரி ஒருவர் தான் வளர்த்த நாய்க்குட்டியின் வாயில் துணிவைத்து அடைத்துவிட்டு அடித்த சம்பவம் இன்னும் என் மனதினை விட்டு நீங்கவில்லை என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.
மிருக வதை தடுப்பிற்கான இணையதளம் குறித்து பேசிய அவர், "விலங்குகள் மனிதர்களுக்கு உதவி செய்கின்றன. ஆனால் மனிதர்கள் பதிலுக்கு அவைகளை இம்சைபடுத்துகிறார்கள்.
பிராணிகளுக்கு அன்பு காட்டவும், நேசிக்கவும் தெரியும். மனிதர்களுக்குத்தான் அந்த விஷயங்கள் தெரிவதில்லை.
மிருகமாகும் மனிதன்:
மனிதநேயத்தை மனிதன் இழக்கும்போது மிருக நிலைக்குத் தள்ளப்படுகிறான். அதனால் இனி பிராணிகள் எல்லாம் சேர்ந்து மனிதர்களுக்கு ப்ளூ கிராஸ் போன்ற அமைப்புகளை ஆரம்பிக்க வேண்டியது தான்'' என்கிறார் மேனகா காந்தி.
தாக்கப்பட்ட முதியவர்:
மேலும் அவர் கூறுகையில், மும்பையை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவரை இளைஞர்கள் சிலர் சேர்ந்து சரமாரியாக அடித்து வீழ்த்தினார்கள். காரணம் கேட்ட போது, அவர் தெரு நாய்களை சேர்த்து வைத்துக் கொண்டு உணவளித்தார் என்றார்கள்.
பெருகிவிட்ட நாய்கள்:
அவரால்தான் அந்த தெருவில் நாய்கள் பெருகிவிட்டன. அவரை ஒழித்தால்தான் நாய்கள் ஒழியும் என்றார்கள்.
கண்டுகொள்ளாத காவல்துறை:
ஆதரவற்ற நாய்களுக்கு உணவளித்தது ஒரு குற்றமா. பிரச்சினை காவல் துறைக்குப் போனது. அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்றார்கள். பிறகு அதில் நான் தலையிட்டு சம்பந்தப்பட்டவர் களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தேன்.
நாய்க்குட்டிக்கு கொடுமை:
மும்பையில் வசிக்கும் ஒரு உயரதிகாரி தன் வீட்டில் வளர்த்து வந்த நாய்க் குட்டியின் வாயில் துணியை அடைத்துவிட்டு, உயிர் போகும் வரை அடித்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த புகாரை காவல்துறை வாங்கவில்லை. அங்கும் நான் தலையிட வேண்டியதாகி விட்டது.
பசுக்கள் படும் பாடு:
வயதான மாடுகள் படும்பாடு இருக்கிறதே கொஞ்சம் நஞ்சமல்ல. பசுவை தாயாக மதிக்கும் பாரதத்தில் வயதான பசுக்களை நடத்தும் விதம் பார்த்தால் கண்களில் ரத்தம் வந்துவிடும். வயதான பின்பு பசுவின் சொந்தக்காரர்களே அதனை கசாப்பு கடைக்காரர்களுக்கு விற்றுவிடுகிறார்கள்.
மிருக வதையை தடுப்போம்:
இன்றும் நாட்டில் மிருகவதையை தடுக்க நினைப்பவர்கள் ஏராளமானோர் உள்ளார்கள். அவர்கள் எல்லாம் தங்கள் பெயரை வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். உயிர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். உலகம் இன்ப மயமாகும் புரிந்து கொள்ளுங்கள்'' என்கிறார் பிராணிகள் ஆர்வலரான மேனகா காந்தி.