டிக்கெட் முன்பதிவில் ஜூலை 1-ந் தேதி முதல் எந்த ஒரு மாற்றமும் இல்லை: ரயில்வே அமைச்சகம் விளக்கம்
டெல்லி: ஜூலை 1-ந் தேதி முதல் ரயில் முன்பதிவில் புதிய நடைமுறைகள் கொண்டுவரப்படுகிறது என வெளியான தகவல் முற்றிலும் தவறானது என ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
சமூக வலைதளங்கள், வாட்ஸ்ஆப், உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ஜூலை 1-ந் தேதி முதல் ரயில்வே முன்பதிவில் புதிய விதிமுறைகள், புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக தகவல் வெளியாகின. ஆனால் அது முற்றிலும் தவறானது, அவ்வாறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ரயில்வே அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
ஜூலை 1-ந் தேதி முதல் ரயில்வே முன்பதிவு நடைமுறையில் எந்தவித புதிய மாற்றங்களும் செய்யப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட்களை வழக்கம் போல ஆன்லைன், டிக்கெட் கவுண்டர்களில் பெற்றுக் கொள்ளலாம். இந்த விதிமுறைகள் சுவிதா சிறப்பு ரயில்களுக்கும் பொருந்தும். டிக்கெட் ரத்து செய்தால் திரும்ப வழங்கப்படும் கட்டணம், கடந்த 2015-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகளே பின்பற்றப்படும். அதில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களில் வழக்கம்போலவே டிக்கெட் வழங்கப்படும். மேலும், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தட்கல் டிக்கெட் ரத்து செய்தால் பணம் எதுவும் திரும்பக் கிடைக்காது என்ற பழைய விதிமுறையே அமலில் இருக்கும். புதிய கால அட்டவணை வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.