புதிய மது ஆலைகளுக்கு அனுமதி இல்லை: மத்திய பிரதேச முதல்வர் திட்டவட்டம்
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் இனி புதிய மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.
இது குறித்து இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருப்பதாவது:-
சில நாட்களுக்கு முன்னர், மத்திய பிரதேச மாநிலத்தில் புதிய மது ஆலை அமைக்க அனுமதி வழங்கும்படி 2 பிரபல நிறுவனங்கள் அரசிடம் விண்ணப்பித்தன. அந்த விண்ணப்பங்களை தூக்கி குப்பை கூடையில் போடும்படி அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன்.
புதிய மது ஆலைகள் அமைக்க அனுமதி வழங்குவதில்லை என்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது. அதேபோல் மாநிலத்தில் புதிய மதுக்கடைகள் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.
மதுவின் தீமையில் இருந்து மக்கள் விடுபடுவதற்கான தீவிர பிரச்சாரம் மாநில அரசின் சார்பில் நடத்தப்படும். பின்னர், படிப்படியாக மாநிலத்தில் தற்போது உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்றார்.