இந்தியாவின் நிலையை ஏற்காவிட்டால் பேச்சுவார்த்தை இல்லை... பாகிஸ்தானுக்கு சுஷ்மா ஸ்வராஜ் கண்டிப்பு
டெல்லி : இந்தியா சொல்வதை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்தியா சொல்வதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் இங்கு வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாளையும் (23, 24-08-2015) நாளை மறுதினமும் இந்தியா-பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தையை நடத்த ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக நடந்து வரும் நிகழ்வுகள் பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் விதமாகவே உள்ளன.
பேச்சுவார்த்தைக்காக இந்தியா வரும் சர்தாஜ் அசிஸ், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களையும் சந்தித்து பேசுவதற்கு அழைப்பு விடுத்திருந்தார். பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சர்தாஜ் அஜிஸ், காஷ்மீர் விவகாரத்தை விலக்கிவிட்டு இந்தியாவுடன் பேச ஏதுமில்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும் எந்தவித முன்நிபந்தனைகள் இன்றி இந்தியாவுக்கு புறப்படப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாதத்தை தவிர பாகிஸ்தானுடன் வேறு எதைப்பற்றியும் பேச முடியாது என உறுதிபட கூறினார்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியா வரும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஹூரியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. இந்த சந்திப்பின்போது பயங்கரவாதம் பற்றி பேசுவதற்கு மட்டுமே முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்தியா சொல்வதை ஏற்றுக்கொண்டால் சர்தாஜ் அஜிஸ் இங்கு வரவேண்டும் என்று கூறிய சுஷ்மா, இந்தியாவின் நிலையை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் பேச்சுவார்த்தை நடைபெறாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.