தேசிய நலனே முக்கியம்… பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பில்லை.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
எம்பி அகமது மரணம் அடைந்ததையடுத்து இன்று பட்ஜெட் தாக்கல் செய்வதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எதிர்க்கவில்லை. தேசிய நலனே முக்கியம் என்று அக்கட்சி கூறியுள்ளது.
டெல்லி; தேசிய நலனே முக்கியம் என்பதால் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எதிர்ப்பு தெரிவிக்காது என்று கூறியுள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையுடன் நேற்று தொடங்கியது. நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும் எம்பியுமான இ. அகமது நாடாளுமன்றத்திலேயே மயங்கி விழுந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், இன்று அதிகாலை 2 மணி அளவில் மரணம் அடைந்தார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் இன்று தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எம்பி அகமதுவின் மரணத்தால் அது தடை படும் நிலை உருவானது. அவையின் உறுப்பினர் ஒருவர் மரணம் அடைந்தால் நாடாளுமன்றத்தின் அவை ஒத்தி வைக்கப்படுவது மரபு. இதனால் இன்று நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதா அல்லது பட்ஜெட்டை தாக்கல் செய்வதா என்பது குறித்து கட்சிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இன்று பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எதிர்க்காது என்று கூறியுள்ளது. மேலும் தேசிய நலனே முக்கியம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. மறைந்த இ. அகமது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.