கரைபுரளும் வெள்ளம்.. களை இழந்த ஓணம்.. வடியாத நீரில் இன்னும் விடியாத சோகம்!
கேரள மக்கள் இன்று ஓணம் கொண்டாடவில்லை.
கேரளா: வடியாத வெள்ளம் காரணமாக மக்களுக்கு விடிவு இன்னும் பிறக்காத நிலையில் கருப்பு ஓணம் கேரளத்தில் நடைபெற்று வருகிறது.
ஓணம் என்றாலே கேரள மக்களுக்கு எப்பவும் கொண்டாட்டம்தான். 10 நாட்களும் அந்த மாநிலமே களை கட்டும். இந்த திருவோணம் திருநாளன்று பாதாள உலகத்தில் இருந்து மகாபலி மன்னன் மலையாள மக்களை பார்ப்பதற்காக வருகிறார் என்பதுதான் இதன் ஐதீகம். அப்படி தங்களை பார்ப்பததற்காக வரும் மன்னனை வரவேற்பதற்காக வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு வரவேற்பர்.
அத்தப்பூ கோலம்
வித விதமாக சமைக்க வழியில்லாதவர்கள்கூட இன்று ஒருநாள் அறுசுவை சமைத்து அக்கம்பக்கத்தினருக்கு கொடுத்து, தாங்களும் சாப்பிட்டு மகிழ்வார்கள். இந்த தடபுடல் விருந்துக்கு ஓண சதயம் என்றே பெயர். அடை, அவியல், பால்பாயாசம், கூட்டு, சாம்பால், எரிசேரி, பப்படம்... என அந்த இலையே நிறைந்து வழியும். விருந்துக்கு பிறகு ஒரே ஆட்டம் பாட்டம்தான், புத்தாடை அணிந்துகொண்டு, அத்தப்பூ கோலத்தில் மீது குத்துவிளக்கு ஏற்றி வைத்து பெண்களின் டான்ஸ்தான் களைகட்டும்.
வரலாறு காணாத வெள்ளம்
ஆனால் இதில் எதையுமே காணோம் இந்த வருடம். மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வற்றவில்லை. வெள்ளத்தில் ஏராளமானோர் இறந்தவர்களை தவிர மாயமான பலரை இன்னும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. வீடு, வாசல் என எல்லாமே ஆட்டம் கண்டுள்ளது. பெரும்பாலான பகுதிகள் சேறும், சகதியுமாக கிடக்கிறது. முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களால் அல்லது சொந்த பந்தங்களை இழந்தவர்களால் ஓணத்தை வரவேற்று கொண்டாட முடியவில்லை. வரலாறு காணாத வகையில் இந்த ஓணம் கேரள மக்களுக்கு வாய்த்துள்ளது.
கவலைகளின் ரேகைகள்
பூக்கள் இன்றி, கோலங்கள் இன்றி, அலங்கார விளக்குகள் இன்றி களையிழந்து உள்ளது இன்றைய ஓணம். மக்கள் முகத்தில் கவலைகளின் ரேகைகள் அப்பிக் கிடக்கின்றன. இந்த இழப்பிலிருந்து விரைவில் மக்கள் மீண்டு வரவேண்டும் என்று கூறி பல்வேறு தலைவர்களும் ஓணம் வாழ்த்துக்களை தெரித்து கொண்டுள்ளனர். கேரள முதல்வதரே, இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கூறினார். பிறகு நேற்று பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்து கொண்டு ஓணம் கொண்டாடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
விரைவில் விடுவித்து கொள்வர்
ஆனாலும் உதவிகளை செய்திடும் மக்களால், ஓணத்துக்குள் முழுமையாக தங்களை ஈடுபடுத்தி கொள்ள முடியவில்லை. ஆனால் கன்னியாகுமரியில் மட்டும் இன்று ஓணம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் கேரள மக்கள் அனைத்துவகை இழப்பு, சோகங்களிலிருந்து விடுவித்து கொண்டு மகாபலி மன்னனை எதிர்கொண்டு வரவேற்பார்கள் என நம்புவோம்.