ராமர் கோயில் கட்டுவதை எந்த சக்தியும் தடுக்க முடியாது...'சர்ச்சை' சாக்ஷி மகராஜ் தகவல்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாஜக எம்பி சாக்ஷி மகராஜ் தெரிவித்துள்ளார்.
லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாஜக எம்பி சாக்ஷி மகராஜ் கூறியுள்ளார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் இன்று பாஜக மூத்த தலைவர் அத்வானி லக்னோ நீதிமன்றத்தில் ஆஜராகி சொந்த ஜாமீன் பெற்றுள்ளார். இந்த நிலையில், ராமர் கோவில் கட்டும் பணியை தடுத்து நிறுத்தும் எந்த சக்தியும் பூமியில் இல்லை என்று சாக்ஷி மகராஜ் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் சாக்ஷி மகராஜ். அப்போது அவர் கூறுகையில், " பாபர் மசூதி- ராமர்கோவில் என்ற விவாதத்தை தற்போது கைவிட வேண்டும். ராமர் கோவில் கட்டுவதை எதிர்த்தவர்கள் தற்போது ராமர் பக்தர்களாக மாறியுள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு முஸ்லீம் மக்கள் கூட ஆதரவு தெரிவிக்கின்றனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை தடுக்கும் எந்த சக்தியும் பூமியில் இல்லை" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரும், மூத்த ஹிந்துத்துவா தலைவருமான ராம் விலாஸ் வேதாந்தி, இதுபற்றி கூறுகையில், அயோத்தியில் இருந்த சர்ச்சைக்குரிய மசூதியின் கோபுரத்தை இடித்த நபர்களில் நானும் ஒருவன் எனக் குறிப்பிட்டுள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையில், ஆஜராகும்போது அவர் இதனை தெரிவித்தார்.